இராயலசீமை
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஒரு புவியியற் பகுதியாக இராயலசீமை திகழ்கிறது. மற்ற இரு பகுதிகள் தெலுங்கானா, கடற்கரை ஆந்திரா இராயலசீமை புவியியற் பகுதியில், கர்னூல், கடப்பா, ஆனந்த்தபூர், சித்தூர், பிரகாசம் மாவட்டத்தின் சில பகுதிகள் மற்றும் நெல்லூர் மாவட்டத்தின் சில பகுதிகள் சேரும். கருநாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டம் மற்றும் துமக்கூர் மாவட்டத்தின் பாவகடா பகுதியும் இராயலைசீமை பகுதிக்கு உரியதென்பர்.

வரலாறு
வேங்கி (கீழைச் சாளுக்கியர்) மன்னர்களின் பூர்வீகம் இராயலசீமை நிலப்பரப்பில் அமைந்ததாகக்கூறுவர். ஏனைய தெலுங்கு பேசும் பகுதிகளான தெலுங்கானா மற்றும் கோஸ்தா ஆகியவற்றை ஒப்பிடுகையில் இராயலசீமை, நிலப்பரப்பில் சிறியதாக இருந்தாலும், இப்பகுதி, தெலுங்கு இனம் மற்றும் பண்பாட்டிற்கு மிகுதியாக பங்களித்துள்ளது.இப்பகுதி ஐதராபாத் நிசாமால் மதராஸ் மாகாணத்திற்கு துணைபடைக்காக(படை உதவி)1799ல் நான்காம் மைசூர் போருக்கு பின் தரப்பட்டது ஆகவே இப்பகுதி ராயல்(சிறந்த) சீமை(வெளிநாடு) என்ற பொருளில் பெயரிடப்பட்டது
மொழி வரலாற்றில் பங்கு
தெலுங்கு மொழியின் மிகப்பழமையான கல்வெட்டான "சிலாசாசனம்", இராயலசீமையின் பகுதியாகக்கருதப்படும் பெல்லாரி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அரசியல்
இராயலசீமை ஆந்திர மாநிலத்தின் பின் தங்கிய பகுதியாக இருப்பதால், இதனை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத்தொடங்கியுள்ளன. முக்கியமாக, திசம்பர் திங்கள் 2009 -ஆம் ஆண்டு தெலுங்கானா தனி மாநிலமாக உருவாகக்கூடும் என்று இந்திய உள்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அறிவித்ததால், இராயலசீமையும் தனி மாநிலமாக வேண்டும் என்று சில ஆந்திர மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.
இராயலசீமை பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் ஒய்.எஸ். இராஜசேகர ரெட்டி, சந்திரபாபு நாயுடு, கோட்ல விஜய பாஸ்கர ரெட்டி, தாமோதரம் சஞ்சீவய்யா நீலம் சஞ்சீவ ரெட்டி. மற்றும் கிரண் குமார் ரெட்டி.